10 ஆண்டுகளுக்கு பிறகு ஊருக்குள் வந்த வெள்ளம்: காெண்டாடி மகிழ்ந்த கிராம மக்கள்

பத்து ஆண்டுகளுக்கு பிறகு பொங்கிய வெள்ளம்: குதூகலத்தில் பொங்கிய மக்கள் உள்ளம்.

Update: 2021-12-06 15:31 GMT

பத்து ஆண்டுகளுக்குப்பிறகு ஆர்.காவனூர் கிராமங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி சாலைகள், பாலத்தில் செல்லும் வெள்ள நீரில் பொதுமக்கள் நீச்சலாடி ஆனந்த கூத்தாடினர்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு பொங்கிய வெள்ளம்: குதூகலத்தில் பொங்கும் பொது மக்கள் உள்ளம்.

மதுரையிலிருந்து வைகை நீர் திறந்து விடப்பட்டதையடுத்து, ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர், தொருவளூர், காரேந்தல் கிராமங்களுக்கு இடையே உள்ள பாலத்திலும் சாலைகளிலும் தண்ணீர் சொல்வதால் இரு ஊர்களும் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.

மேலும், கிராமங்களில் வைகை நீர் ஊருக்குள் பாய்ந்து செல்வதால் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், சாலைகளிலும் பாலத்தில் செல்லும் நீரில் குதூகலமாக குளித்து மகிழ்கிறார்கள் இப்பகுதி பொதுமக்கள்.

வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, வைகை அணை முழு கொள்ளவை எட்டியதை தொடர்ந்து வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் கடைமடை பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த தண்ணீரை வைத்து ராமநாதபுரம் பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாய் மற்றும் 100க்கும் மேற்பட்ட சிறு குறு கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

இதில், ராமநாதபுரத்திலிருந்து ஆர்.காவனூர், பாண்டியூர், நயினார்கோவில் வழித்தடத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பத்து ஆண்டுகளுக்குப்பிறகு ஆர்.காவனூர் கிராமங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி சாலைகள், பாலத்தில் செல்லும் வெள்ள நீரில் பொதுமக்கள் அமர்ந்தும், குளித்தும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ,விளையாடியும் குதூகலம் அடைந்து நீரில் நனைந்து நீச்சலாடி ஆனந்த கூத்தாடி வருகின்றனர்.

இந்த வெள்ளத்தால் ஒரு சில பகுதிகள் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட, பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் செய்கின்றனர்.

Tags:    

Similar News