இராமேஸ்வரம் அருகே தடை செய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டை பறிமுதல்
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தடைசெய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை மெரைன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த தடைசெய்யப்பட்ட 300 கிலோ கடல் அட்டைகளை மெரைன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை மீனவர்கள் பிடிப்பதாக மெரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலை கடற்கரையோரத்தில் இராமேஸ்வரம் மெரைன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள மீன் கம்பெனி ஒன்றில் மெரைன் போலீசார் சோதனை செய்த போது, அங்கு சாக்கு பைகளில் தடைசெய்யப்பட்ட உயிர் கடல் அட்டைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து மெரைன் போலீசார் உயிருடன் இருந்த சுமார் 300 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளையும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் தனுஸ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.இந்த தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்ததா என்ற கோணத்தில் தொடர்ந்து மெரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.