இராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல் நீர்
இராமேஸ்வரத்தில், 50 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கியது; இதனால், படகுகள் தரை தட்டி நிற்கின்றன.
இராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதையடுத்து, இராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், வழக்கத்தைவிட மன்னார்வளைகுடா, லட்சத்தீவு கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை நங்கூரமிட்டு கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். இந்தநிலையில் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் திடீரென 50 மீட்டர் தொலைவில் கடல் உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்தனர். மீனவர்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகுகள் அனைத்தும் தரை தட்டி நிற்கின்றது. இதனால், அவர்கள் கவலையடைந்துள்ளனர்.