இராமேஸ்வரத்தில் 100 அடி தூரத்திற்கு உள் வாங்கிய கடல்நீர்
இராமேஸ்வரத்தில் கடல் நீர் 100 அடி தூரத்திற்கு உள் வாங்கியதால் சிறியரக படகுகள் தரைதட்டியன.
இராமேஸ்வரம் பகுதியில் சில நாட்களாகவே பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் இன்று, திடீரென துறைமுகத்தில் இருந்து சங்குமால் வரை உள்ள பகுதிகளில், கடல்நீர் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக நாட்டுப் படகுகள் தண்ணீரின்றி மணலில் நின்றன.
இதேபோல், அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் கடல்நீர் உள்வாங்கியதால் கடலுக்குள் உள்ள பாறைகள் அனைத்தும் தண்ணீரின்றி காண முடிந்ததுடன், பக்தர்களால் பூஜை செய்து கடலுக்குள் விட்டுச் செல்லப்பட்ட சிவலிங்கமும், தண்ணீர் இன்றி தெளிவாக காணமுடிகிறது. மேலும் கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்கள், கடலில் நீந்தி செல்வதும் தெளிவாக தெரிந்ததால், இப்பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.