இராமேஸ்வரம்: ரூ. 1.5 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்
இராமேஸ்வரம் அருகே 1.5 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகளை, க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இராமேஸ்வரம் அடுத்த வேதாளை பகுதியில், பூட்டியிருக்கும் வீட்டிற்குள் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற கியூ பிரிவு போலீசார், பூட்டிக்கிடந்த 65 வயதான மூதாட்டி முனியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடத்தினர். இதில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 கோடி மதிப்பிலான 86 மஞ்சள் சாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர், மஞ்சள் மூட்டைகளை மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.