இலங்கை கடற்படையை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையின் கப்பல் மோதி மீனவர் உயிரிழந்ததை கண்டித்து மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டிணத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவரின் படகின் மீது இலங்கை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராஜ்கிரண் என்ற மீனவர் உயிரிழந்தார். ராஜ்கிரண் மரணத்தை ஏற்படுத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, தங்கச்சிமடத்தில் மீனவர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் மீனவரின் உயிரிழப்புக்கு காரணமான இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மீனவரின் மரணத்திற்கு எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காத மத்திய, மாநில அரசை கண்டித்தும், மரணமடைந்த மீனவர் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்கிட வேண்டியும், இந்திய இலங்கை மீனவர் நல்லிணக்க பேச்சுவார்த்தையை உடனே நடத்தவும், மீனவர் வாழ்வுரிமை இயக்க மீனவர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர் தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.