கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே தகராறு
கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே நடந்த தகராறில் உணவகத்தின் சேர் அடித்து நொறுக்கப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட தகராறால் உணவகத்தின் சேர் அடித்து நொறுக்கப்பட்டது.கலாம் தேசிய நினைவகம் எதிரே பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் இருந்து 3 பேருந்துகளில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் அடுத்த பேக்கரும்புவில் அமைந்துள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பார்வையிடுவதற்காக இன்று சுற்றுலா வந்துள்ளனர்.
சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் சிலருக்கும் கல்லூரி பேருந்து ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்கள் சிலர் அப்துல் கலாம் தேசிய நினைவகம் எதிரே உள்ள உணவகத்தில் பேருந்து ஓட்டுநர் தேனீர் அருந்தி கொண்டிருந்த போது ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர்.
ஓட்டுநர் மாணவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்தரமடைந்த மாணவர்கள் சிலர் அந்த உணவகத்தின் முன் போடப்பட்டிருந்த சேர் மற்றும் பெஞ்சுகளை அடித்து நொறுக்கினர். இதனை தடுக்க வந்த கடை உரிமையாளர் மற்றம் ஊழியாகளையும் மாணவர்கள் தாக்கியுள்ளனர்.தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மது அருந்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உணவக உரிமையாளர் மற்றும் சாலையோர வியாபாரிகள் கல்லூரி பேருந்தை சிறை பிடித்து மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் சாலையில் ஈடுபட்டனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச்; மற்றும் தங்கச்சிமடம் போலீஸார் மறியலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கலைத்தனர். மாணவர்களை பிடித்து தங்கச்சிமடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களுக்கு போலீசார் இவ்வாறு பொது இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்படி நடந்து கொள்ளக் கூடாது. மீறி நடந்து கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கபப்டும் என எச்சரித்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அப்துல் கலாம் தேசிய நினைவகம் எதிரே சுமார் அரை மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.