எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று 6 மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இன்று 6 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே இலங்கை சிறையில் இருந்த 21 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2022-02-21 08:46 GMT

கடந்த 2020 டிசம்பரில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டிணத்தை சேர்ந்த 56 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 56 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்பானம் சிறையில் அடைத்தது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையால் பிப்.17ம் தேதி 56 மீனவர்களில் 47 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அவர்கள் விமானம் மூலம் 18ம் தேதி சென்னை வந்தடைந்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்திய எல்லையை ஒட்டியுள்ள காரைநகர் கோவளம் கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, 6 மீனவர்களை நாட்டுப்படகுடன் சிறைப்பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் படகினையும் இலங்கை கடற்படையினர் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். பின் 6 மீனவர்களையும் கொரானா, மலேரியா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி இலங்கை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மார்ச்4ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதற்கிடையே ஜன.31ம் தேதி நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்பானம் சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 21 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனால் அவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News