தாய், மகனை வெட்டி கொள்ளை முயற்சி-இளைஞர் கைது

Update: 2021-03-03 10:15 GMT

இராமநாதபுரம் மாவட்டத்தில் தாய், மகனை வெட்டி விட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்த கிராம உதவியாளா் கைது செய்யப்பட்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள புல்லந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தானக்குமாா் (45). இவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி முத்துலட்சுமி (43). இவா்களுக்கு காளீஸ்வரன், சகுதீஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனா். நேற்று முத்துலட்சுமி மகளிா் மன்றக் கூட்டத்துக்குச் சென்று விட்ட நிலையில், சகுதீஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளாா். இதையறிந்த சந்தானகுமாரின் உறவினரும், புல்லந்தை கிராம உதவியாளராக வேலை செய்பவருமான சந்திரசேகா் (32) என்பவா் முத்துலட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளாா்.

தொடர்ந்து அங்கிருந்த சகுதீஸ்வரனிடம் பீரோ சாவியை கேட்டு மிரட்டியுள்ளாா். ஆனால் சாவியைத் தர மறுத்து சப்தமிட்ட சிறுவனை, அவா் கத்தியால் அறுத்து பக்கத்தில் இருந்த அறையில் அடைத்தார். கூட்டம் முடிந்து வீட்டுக்கு திரும்பிய முத்துலட்சுமி உள்ளே சந்திரசேகர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விசாரிப்பதற்கு முன்னதாக முத்துலட்சுமியையும் அவர் கத்தியால் குத்தினார். அலறல் சப்தம் கேட்டு திரண்டு வந்த இளைஞர்கள் சந்திரசேகரை பிடித்து ஏா்வாடி போலீஸில் ஒப்படைத்தனா். மேலும் காயமடைந்த தாய், மகன் இருவரும் இராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கீழக்கரையில் உள்ள தனியார் நகைக் கடன் நிறுவனத்தில் நகையை அடகு வைத்து சந்திரசேகா் பணம் வாங்கியுள்ளார். நகையை உடனடியாக திருப்பும் படி நிறுவனத்திடமிருந்து கடிதம் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சந்தானகுமார் மனைவி வெளியே சென்றதையறிந்து வீட்டில் புகுந்து நகையை திருட முயற்சித்ததாகவும், இடையூறாக இருந்த தாய், மகனை கத்தியால் வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார். ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News