தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தால்தான் பல்வேறு முதலீடுகள் கிடைக்கும்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

Update: 2021-09-26 08:10 GMT

சுற்றுலாதினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா பயணத்தை தொடக்கி வைத்தார், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தால்தான் பல்வேறு முதலீடுகள் தமிழகத்திற்கு வரும்.அதற்கான  நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டு அகாதெமியில் பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் ஆகியோர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா இடங்களுக்கு 4 பேருந்துகளில் ஒரு நாள் இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா  ஆகியோர்  முன்னிலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில்,  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  பங்கேற்று  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம்அமைச்சர் ரகுபதி மேலும் கூறியதாவது:  தமிழகத்தில் சுற்றுலாத்துறை சிறந்த துறையாக விளங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குற்ற சம்பவங்களை குறைப்பதற்கு காவல் துறை அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும், அமைதி தமிழகமாக இருக்க வேண்டும். அமைதியான சூழ்நிலை இருந்தால் தான், பல்வேறு முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைக்கும். அதுதான் முதல்வரின் நோக்கம். மக்களை காப்பாற்றும் வகையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு புதிய குழு ஒன்றை அமைத்துள்ளது அந்த குழு என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதை பொருத்து தமிழகம் அதனைப் பின்பற்றும் என்றார். இதில், எம்எல்ஏ- டாக்டர் முத்துராஜா, முதன்மை கல்வி அலுவலர் சாமிசத்தியமூர்த்தி, முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே. செல்லப்பாண்டியன், க. நைனாமுகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News