தமிழகத்தில் ஒமைக்ரான் வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதை மத்திய மாநில அரசுகள் அங்கீகரித்து அதற்கான அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும்

Update: 2021-12-24 09:00 GMT

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாகி வருவது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்றார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 34 -ஆவது நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வடக்கு மாவட்ட விஜயபாஸ்கர் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, ந. சுப்பிரமணியன்,  தெற்கு மாவட்டச்செயலர் பி.கே. வைரமுத்து உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம்  முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாகி வருவது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். உடனடியாக தமிழக அரசு வல்லுநர் குழு அமைத்து இந்த வைரஸ் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு மேற்கொள்வதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இரண்டாவது அலையில் பாதிப்பு மிகவும் அதிகமாகி பல்வேறு சவால்களை நாம் சந்தித்தோம்

அதனை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பல்வேறு சுகாதார கட்டமைப்புகளை அரசு உடனடியாக மேம்படுத்த வேண்டும். மற்றொரு ஊரடங்கு என்பது பொருளாதார சவால்களை ஏற்படுத்தும். எனவே அதனை தவிர்ப்பதற்கு எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . இந்த நேரத்தில் பூஸ்டர் டோஸ் குறித்து நாம் பேசுவது தவிர்க்க முடியாதது.மேலை நாடுகளில் தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.

இங்கு ஏற்கெனவே பல மருத்துவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி வருவதை யாரும் மறுக்க முடியாது. மத்திய மாநில அரசுகள் அதனை அங்கீகரித்து, அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.தொற்று அதிகமானால் மக்களுக்கு அச்சம் ஏற்படும் அதை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.பண்டிகை காலங்கள் அதிகமாக வருவதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மேலும் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள்  கார்த்திக்தொண்டைமான், ராஜநாயகம், நெடுஞ்செழியன், நகரச்செயலர் க. பாஸ்கர், ஊராட்சித்தலைவர் ஏவிஎம். பாபு, சுமன், மணி நிர்வாகிகள் எஸ்.ஏ.எஸ். சேட், மலர்விழிமுத்து, டவுன் பாங்க் மாரிமுத்து, ஜீவாசெல்வராஜ், ஆசிரியர் மாரிமுத்து, வே.மு.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News