சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக வீண்வதந்திகள் பரப்புவதை கைவிட வேண்டும்: ஆசிரியர் மன்றம்
10 ஆண்டுகளாக பெற்று வந்த உரிமைகளும் சலுகைகளும் கடந்த ஆட்சிகாலத்தில் பறிக்கப்பட்டது. ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் அவமதிக்கப்பட்டனர்
சமூக ஊடகங்களில் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீண்வதந்திகள் பரப்பும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்று தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களின் உரிமைகளை போராடி வாதாடி நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், கடந்த பத்தாண்டுகளாக நாம் பெற்று வந்த உரிமைகளும் சலுகைகளும் கடந்த ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டது. அதற்காக போராடிய ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் அவமதித்தது.
அதோடு மட்டுமல்லாமல் போராடியவர்களை பழி வாங்கியது. அந்த நிலையை மாற்றக் கூடிய மாபெரும் சக்தியாக தமிழகத்தின் விடியலாக தமிழக முதல்வர் விளங்குகிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்று கொரோனா என்னும் கொடிய நோயின் கோரத்தாண்டவத்தை தனது செயல்பாடுகளால் கட்டுக்குள் கொண்டு வந்ததால், தமிழகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.
அதுபோல, ஆசிரியர் அரசு ஊழியர்கள் பெற்றுவந்த சலுகைகளும் உரிமைகளும் நிச்சயம் விரைவில் நமக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு உள்ளது. அதற்கிடையே ஒருசில சமூக வலைதளங்களிலும் ,சமூக ஊடகங்களிலும் வீண் வதந்திகளை பரப்பி கொண்டு, அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார்.எனவே சமூக ஊடகங்களில் வீண் வதந்திகளை பரப்பி, தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கேட்டுக்கொள்கிறது என கூறியுள்ளார்.
.