புதுக்கோட்டை: கோயில் திறப்பதற்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி

கோயில்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து இந்தத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது

Update: 2021-10-15 16:30 GMT

புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவிலில் இன்று அம்பு போடும் நிகழ்வில் சந்திரசேகரர் சுவாமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

புதுக்கோட்டையில் கோயில்களை வெள்ளி,சனி, ஞாயிறு கிழமைகளில்  திறப்பதற்கு உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர். 

புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழா நிறைவு நாளன்று அம்பாள் அம்பு போடும் விழா  நடைபெற்றது. அரக்கர்களை அழிப்பதற்காக அம்பாள் நவராத்திரி விரதம் இருந்து நிறைவு நாளன்று குதிரை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி நான்கு திசைகளில் இருந்து வரும் அரக்கர்களை அழிப்பதற்காக  50 அரக்கர்களை கொன்று பூமியில் உள்ள உயிர்களை காத்தருள்கிறார் என்று அம்பாள் திருவிளையாடல் புராணங்களில் கூறப்படுகிறது.



புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோவில் முன்பாக அம்பாள் எழுந்தருளி அம்பு போடும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் நடைபெறாமல் இருந்த திருவிழாவை நடத்தும் வகையில், கோயில்களைத் திறக்க  தமிழக அரசு அனுமதி அளித்ததையடுத்து விழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவுக்கு  அனுமதி அளித்த தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.


Tags:    

Similar News