குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டு

குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று வந்த புதுக்கோட்டை மாணவிகளை, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார்.

Update: 2021-10-13 07:04 GMT

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று வந்த   மாணவிகளை பாராட்டிய  விளையாட்டு துறை அமைச்சர்  மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில், அல்டியஸ் ஸ்போட்ஸ் அகடாமியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகின்றனர். சென்னையில் கடந்த 10,11 ஆகிய தேதிகளில் ஐந்தாவது மாநில அளவிலான பெண்கள் சீனியர் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில்,  அல்டியஸ் ஸ்போட்ஸ் அகடாமியில் பயிற்சி பெற்றுவரும் மாணவிகள் ஜீவிதா காவியா, சுவாதி, தமிழீஸ்வரி, சர்மிளா, ஸ்வேதா, கலைவாணி சன்மதி, ஆகியோர், பங்கேற்றனர்.

இதில்,  81கிலோ எடைப்பிரிவில் ஜீவிதா தங்கப் பதக்கத்தையும்,  60- 63 கிலோ எடைப்பிரிவில் காவியா தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினர். அதேபோல் சுவாதி, தமிழீஸ்வரி, சர்மிளா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும்,  சுவேதா, கலைவாணி, சன்மதி ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

இந்நிலையில்,  புதுக்கோட்டையில் இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை,  மாநில அளவில் நடைபெற்ற சீனியர் குத்துச்சண்டை போட்டியில், பதக்கங்களைப் பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாநில அளவில் நடைபெற்ற சீனியர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜீவிதா மற்றும் காவியா ஆகியோர், வரும்  21ம் தேதி ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள,  தேசிய அளவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில் அல்டியஸ் ஸ்போட்ஸ் அகடாமி தலைவர் செந்தில் கணேஷ் மற்றும் பயிற்சியாளர் பார்த்திபன், காதர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News