ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை: உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

ஆன்லைன் ரம்மி தடை செய்வது தொடர்பாக சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது

Update: 2021-09-15 09:19 GMT

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டஅமைச்சர் எஸ். ரகுபதி. உடன் விளையாட்டுத்துறை அமைச்சர் சில.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ டாக்டர் வை.முத்துராஜா.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ஆயிரத்து 933 வீடுகள் கட்டப்பட்டுள்ளது பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை முழுமையாக செலுத்தியுள்ள 376 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகளை தேர்வு செய்யும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஆட்சியர் கவிதா ராமு எம்எல்ஏ முத்துராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 பின்னர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம்  மேலும் கூறியதாவது: இன்று தங்களுடைய பங்களிப்பு தொகையை செலுத்திய 376 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு செய்யப்பட்டது.தமிழக அரசின் முன்னோடித் திட்டமாக விளங்கும் இந்த திட்டத்தின் கீழ் குடிசையில் வாழும் பொதுமக்கள் இங்கு பயன்பெறுவார்கள்.

இந்த குடியிருப்பு பகுதிகளின் கட்டுமான பணி முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்த குடியிருப்பின் தரம் குறித்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. தரம் நன்றாக இருந்தால் மட்டுமே, பயனாளிகளிடம் வீடு ஒப்படைக்கப்படுகிறது. கட்டுமான பணியின் தரம் குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் ஒப்பந்தகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

ஆன்லைன் ரம்மி தடை செய்வது தொடர்பாக, சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், தமிழக அரசின் அட்டார்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியதால் தற்போது சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு கொண்டுவரப்படவில்லை. விரைவில், ஆன்லைன் ரம்மி தடை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.

இதேபோன்று,  7 பேர் விடுதலை மற்றும் நீட் தேர்வு ரத்து தொடர்பாகவும் தமிழக அரசின் சட்ட போராட்டம் தொடரும். சட்டப் போராட்டம் என்பது நீண்டகால தீர்வு குறுகிய காலத்துக்குள் தீர்வு காண முடியாது. இறுதியில் நியாயம் வெல்லும். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 கைதிகள் விடுதலை செய்வது தொடர்பாக சர்ச்சை தேவையில்லாதது. சட்டத்திற்கு உட்பட்டு நன்னடத்தை காரணமாக  விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொடும் குற்றங்கள் குண்டுவெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை.

திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று  பல்வேறு  பகுதிகளிலிருந்து வந்துள்ள அகதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. சிறைத் துறைக்கும் சிறப்பு முகாமிற்கு எந்தவித தொடர்பும் இல்லை.  இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது. அவர்களின் விடுதலை  விவகாரம் நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது. மேலும், அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக, நீதிமன்றமும், மத்திய அரசும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

Similar News