புதுக்கோட்டையில் 65 மூதாட்டி அடித்து கொலை: போலீசார் விசாரணை

புதுக்கோட்டை மருத்துவமனை வளாகத்தில் 65 மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-20 14:00 GMT

புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மோப்பநாய் தீரன் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம்(65). இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் இவர் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு சாப்பாடு உள்ளிட்டவைகளை வாங்கிக் கொடுப்பது மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவருடைய ஓய்வு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலையில் பார்த்தபோது, நாகரத்தினம் அந்த அறையில் ரத்த வெள்ளத்தில் மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் குருநாதன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை சோதனை செய்ததில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் தீரன் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 

மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி சென்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் சென்று நின்று விட்டது.

இந்த கொலையை யார் செய்தது என்பது குறித்தும், அவருக்கு ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்தும் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்த நாகரத்தினம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News