தொடர் செயின்பறிப்பு, 2 பேர் கைது- 52 சவரன் நகைகள் மீட்பு

Update: 2021-03-10 05:00 GMT

புதுக்கோட்டை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் 52 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனியே சென்ற இரு பெண்மணிகளிடம் மோட்டார்பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவர்கள் அணிந்திருந்த நகைகளை பறித்து விட்டு அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடியாப்பட்டியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தனிப்படை அமைத்தார்.

கடந்த 10 நாட்களாக தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளுர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அந்த இரண்டு பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் (19), விஷ்ணு(22) என்பதும் அவர்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து பெண்களிடம் மோட்டார்பைக்கில் சென்று செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த இரண்டு பேரையும் திருமயம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்த சுமார் 52 சவரன் தங்க நகைகளை மீட்டதோடு செயின் பறிப்புக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார்பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News