நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி

Update: 2024-04-16 02:45 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சியில், தேர்தல் கமிஷன் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் பேசினார். அருகில் கலெக்டர் உமா.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

தேர்தல் கமிஷன் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் முன்னிலை வகித்தார். மாவட்டஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 53 ஓட்டுச்சாவடி மையங்களில், 174 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே அந்த ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்கள் நுண்பார்வையாளர்களாக (மைக்ரோ அப்சர்வர்) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் பணிபுரியும் நுண்பார்வையாளர்கள் தங்கள் ஓட்டுக்களை செலுத்த வசதியாக படிவம் 17-ல் தங்களது ஓட்டுச்சாவடி விவரங்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் ஏப்.18ம் தேதி சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், அடையாள அட்டை மற்றும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கான உத்தரவைப் பெற்றுக் கொண்டு ஏப்.19ம் தேதி, அதிகாலை 5.30 மணிக்கு தொடர்புடைய ஓட்டுச்சாவடிக்கு சென்று தேர்தல் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் பணிகள் முடிந்தவுடன் தங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து முத்திரையிட்ட உறையில் தேர்தல் பார்வையாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும். எனவே நுண்பார்வையாளர்கள் அனைவரும் தேர்தல் நேர்மையாகவும் தூய்மையாகவும் நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன் உள்ளிட்ட திரளான நுண்பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News