தக்காளி விலை மீண்டும் கிடுகிடு - ஒரு கிலோ ரூ.80 ஆக உயர்வு
நாமக்கல்லில், தக்காளி விலை மீண்டும் வேகம் எடுத்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.80 ஆக விலை உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தொடர்மழை பெய்து வருவதால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு கிலோ ரூ.30 ஆக இருந்த தக்காளி, படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனையானது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளிமாநிலங்களில் இருந்த தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதால், அதன் விலையில் சரிவு ஏற்பட்டு ஒரு கிலோ தக்காளி ரூ.50 ஆக விற்பனையானது.
இந்த நிலையில் மழை குறையாததால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நாமக்கல் பகுதியில் தக்காளி விலை மீண்டும் உயரத்தொடங்கியது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.80 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.