மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு ஜன.25ல் சிறப்பு முகாம்

நாமக்கல் கோட்டத்தில், மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு, ஜன.25ல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Update: 2022-01-22 12:30 GMT

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாமக்கல் கோட்டத்தில்,  விவசாய மின் இணைப்பிற்கு பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களின் பெயர் மாற்றம், சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண் மாற்றம் ஆகியவை செய்து கொடுக்க,  சிறப்பு முகாம், நாமக்கல் கோட்டத்தில்,  வரும் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. நாமக்கல் மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெயர் மாற்றத்திற்கு இறப்புச்சான்று, வாரிசு சான்றிதழ், பங்குதாரர்களின் ஆட்சேபனை இல்லா கடிதம், வருவாய் அலுவலர் சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். சர்வே எண் உட்பிரிவு மாற்றத்திற்கு வருவாய் அலுவலர் சான்று மற்றும் வரைபடமும், சர்வே எண் மற்றும் கிணறு மாற்றத்திற்கு பழைய, புதிய வருவாய் அலுவலர் சான்று, வரைபடம் ஆகியவை கொண்டு வர வேண்டும்.

மேற்கண்ட அனுமதி அளிக்கும்பொழுது விண்ணப்பதாரர்கள் அந்தந்த பிரிவு அலுவலகப்பதிவின்படி தமது தயார் நிலையினையும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இம்முகாம்களை தவறாமல் விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News