நாமக்கல் நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வரி மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்புடும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் நகராட்சிக்கு 2021-2022 ஆம் நிதியாண்டு வரை செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், நகராட்சி கடை வாடகை மற்றும் தொழில் லைசென்ஸ் கட்டணம் உள்ளிட்ட வரி மற்றும் கட்டண நிலுவை போன்றவற்றை இதுவரை செலுத்தாதவர்கள், நாமக்கல் நகராட்சி அலுவலக கம்ப்யூட்டர் வரி வசூல் மையங்களில் உடனடியாக செலுத்திடவேண்டும்.
வரி மற்றும் கட்டணங்கள் செலுத்த தவறினால், குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு செய்வதுடன் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து வரிவசூல் மையங்களும் செயல்படும். இண்டர்நெட் மூலமாகவும் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.
பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி, நாமக்கல் நகராட்சி பொது மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.