நகைக்கடன் தள்ளுபடி செய்ய லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளர் மீது போலீசார் வழக்கு

நகைக்கடனை தள்ளுபடி செய்ய லஞ்சம் வாங்கிய, பேளுக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-03 01:45 GMT

பைல் படம்

நகைக்கடனை தள்ளுபடி செய்ய லஞ்சம் வாங்கிய, பேளுக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் கர்ணன், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் உள்ள பேளுக்குறிச்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் துணை செயலாளராக 1.6.2019 முதல் பணியாற்றி வந்த கோவிந்தராஜூ (55) என்பவர், 2021ம் ஆண்டு முதல் செயலாளராக (பொறுப்பு) பணியாற்றி வந்தார். தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு, கடன் முழுமையாக தள்ளுபடி செய்து, கடந்த 2021ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கடன் பெற்றவர்களக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் 47,618 பேர் இந்த கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பேளுக்குறிச்சி கூட்டுறவு கடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் தாரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கணக்கிடப்பட்டனர்.

கடந்த 28.3.202 அன்று சங்கத்தில் செலயாளராக (பொ) பணியாற்றிய கோவிந்தாராஜூ, சங்கத்தின் உறுப்பினர் யுவரணாணி என்பவரிடம் தனக்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், அவரது பெயரில் 29.01.2021 தேதியில், 30 கிராம் தங்க நகையை வைத்து பெறப்பட்ட ரூ. 89,000 நகைக்கடனை தள்ளுபடி செய்து தருவதாக கூறியுள்ளார். மேலும் அதே சங்கத்தில் நகைக்கடன் பெற்றிருந்த கீர்த்தணா, சீனிவாசன், சந்திரா, பெருமாள், சிலம்பரசன் ஆகியோரிடமும், நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், கந்தசாமி என்பவரிடம் நகைக்கடன் தள்ளுபடி செய்ய கடந்த 28.3.022 அன்று ரூ. 1,500 லஞ்சமாக பெற்றுள்ளார்.

கூட்டுறவுத்துறை கடன் சங்கத்தில் வேலை செய்த கோவிந்தராஜூ சங்க உறுப்பினர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளதால் அவர் மீது லஞ்ச தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூட்டுறவு துணை பதிவாளர் கர்ணன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையொட்டி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷினி இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் நல்லம்மாள், பேளுக்குறிச்சி கூட்டுறவு சங்க செயலாளர் (பொ) கோவிந்தராஜூவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News