நாமக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-09 04:09 GMT

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், கல்லூரி முதல்வர் சாந்தாஅருள்மொழி முன்னிலையில், கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில், தேசிய சுகாதார இயக்ககத்தின் வழிகாட்டுதலின்படி, முதலாவதாக முன்களப்பணியாளர்களான அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து உள்ளாட்சித்துறையில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இணை நோய்களான சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அதைத்தொடர்ந்து தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது.

தேசிய சுகாதார இயக்ககம் மற்றும் தமிழ்நாடு சுகாதார துறையின் பரிந்துரையின்படி, கடந்த 2 வாரங்களாக 2,356 பிரசவித்த தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 27 இடங்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் நேற்று,371 கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் 234 பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசி 3,32,395 நபர்களுக்கும், 2-ஆம் கட்ட தடுப்பூசி 70,843 பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரிகள் முதற்கட்டம், இரண்டாம் கட்டம் சேர்த்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 4,06,137 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

Tags:    

Similar News