ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தூக்குப்போட்டு தற்கொலை

ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தூக்குப்போட்டு 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-07-12 05:45 GMT

ராசிபுரத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டு திமுக நகராட்சி கவுன்சிலர் தேவிபிரியா, அவரது கணவர் அருண்லால், மகள் மோனிகா ஆகியோர் (பழைய படம்).

ராசிபுரம்: 

ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் கணவர் மற்றும் மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அருண்லால், இவர் ராசிபுரத்தில் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே திமுகவில் வார்டு பிரதிதியாக இருந்து வந்தார். இவரது மனைவி தேவிபிரியா. இவர் தற்போது ராசிபுரம் நகராட்சியில் 13வது வார்டு திமுக கவுன்சிலவராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகள் மோனிகா (18) கல்லூரியில் படித்து வருகிறார்.


நேற்று 11ம் தேதி இரவு அருண்லால், நகைக்கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நள்ளிரவில் அருண்லால், அவரது மனைவி தேவி பிரியா, மகள் மோனிகா ஆகியோர் வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இன்று காலை கடை திறக்க அருண்லால் வராததால், கடை பணியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீட்டின் கதவு உள்பக்கம் தாளிட்டு இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால், அவர்களது உறவினர்கள் அங்குவந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 3 பேரும் தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இது குறித்த தகவல் கிடைத்ததும், ராசிபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று, சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக நகராட்சி கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் உடனடியாகத்  தெரியவில்லை. வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News