புதுச்சத்திரத்தில் நாளை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

புதுச்சத்திரத்தில் நாளை குழந்øதைகளுக்கான மாற்றுத்திறன் தன்மை அளவீடு செய்ய, சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-04-04 06:45 GMT

இது குறித்து நாமக்கல் மாவ ட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கு வர முடியாமல் உள்ள சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவிகள், இடைநிலை மற்றும் மேல்நிலைக்கல்வியை முழுமையாக பெறும் வகையில் கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்தவும், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு உள்ளடக்கிய கல்வி வசதி செயல்படுத்தப்பட்டு, அதன் மூலம் வழங்கப்படும் அனைத்து பயன்களையும் பெற மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

ஒரு குழந்தை கூட விடுபடாமல் இருக்க மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் பிறந்தது முதல் 18 வயது வரையான மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், முட நீக்கியல் மருத்துவர், மனநல மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். புதுச்சத்திரம் வட்டாரத்தை சேர்ந்த பிறந்தது முதல் 18 வயதிலான குழந்தைகளின் மாற்றுத்திறன் தன்மையை அளவீடு செய்ய புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை 5ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் மாற்றுத்திறன் கொண்ட 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்கல், தேவைக்கேற்ப உதவி உபகரணங்கள் வழங்குதல், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெற்றுத்தருதல், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீட்டிலேயே பயிற்சி அளித்தல், பள்ளி செல்லா மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு பள்ளி ஆயத்த முகாம்களில் பயிற்சி அளித்தல், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஆதார வளமையத்தில் பயிற்சி அளித்தல், விளையாட்டுடன் கூடிய கல்வியை அளித்தல், பிசியோதெரபி சிகிச்சை, பேச்சு பயிற்சி மற்றும் சிறப்பு கல்வி அளித்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News