கொரோனா பாதித்த குடும்பத்திற்கு ஸ்மைல் திட்டத்தில் கடன் உதவி

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஸ்மைல் திட்டத்தில் மானிய உதவியுடன் கடன் வழங்கப்படும்.

Update: 2021-07-19 12:45 GMT

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருந்தால், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் ஸ்மைல் என்ற கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய, கொரோனாவால் உயிரிழந்த நபரின் வயது 18 முதல் 60 க்குள் இருக்கவேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம்.

திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனா வைரசால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News