கொல்லிமலை: 2 குழந்தைகளை கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கொல்லிமலையில் இரண்டு குழந்தைகளையும் பள்ளத்தில் வீசி கொலை செய்த தந்தைக்கு, நாமக்கல் கோர்ட்டில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Update: 2022-09-14 00:30 GMT

சிரஞ்ஜீவி.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, குண்டூர்நாடு அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி (29). இவரது மனைவி பாக்கியம் (24). இவர்களுக்கு கிரிதாஸ் (8), கவிதர்ஷிணி (6) என ஒரு மகன், மகள் இருந்தனர். கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த பாக்கியம் கணவரைப் பிரிந்து அரியூர்நாடு கவரப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு இரண்டு குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

குழந்தைகள் இருவரும் கொல்லிமலை கவரப்பட்டி அருகே தெம்பளத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி கவரப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற சிரஞ்சீவி, அவர்களிடம் சமாதானம் பேசி மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். இதையடுத்து குழந்தைகள் இருவரை மட்டும் சீரஞ்சீவியுடன் பாக்கியத்தின் பெற்றோர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சில நாட்களாக குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை. கணவர் சிரஞ்சீயை தொடர்பு கொண்டபோதும் தகவல் எதுவும் தெரியவில்லை. இதில் சந்தேகமடைந்த பாக்கியம், இதுகுறித்து கொல்லிமலை வாழவந்திநாடு போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் சிரஞ்சீவியை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே ஆண்டு நவ.,11ம் தேதி கொல்லிமலை செம்மேடு அருகே சீக்குப்பாறை எனும் இடத்தில் உள்ள வியூபாயிண்டில் இருந்து இரண்டு குழந்தைகளையும் பள்ளத்தில் வீசியெறிந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் கொல்லிமலை தீயணைப்புத் துறையினர் சீக்குப்பாறை அருகே உள்ள பள்ளத்தில் இறங்கிச் சென்றபோது 300 அடி பள்ளத்தில் கிரிதாஸ், கவிதர்ஷி இருவரது சடலமும் கிடந்தது தெரியவந்தது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக வாழவந்திநாடு போலீசார் சிரஞ்சீவியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி தனது இரு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சீரஞ்சீவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News