தமிழக அரசின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டம்: நாமக்கல்லில் 7, 742 பேருக்கு உயர் சிகிச்சை

நாமக்கல் மாவட்டத்தில் 7,742 பேருக்கு ரூ.28 கோடியே 13 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-26 10:45 GMT

முள்ளுக்குறிச்சி சித்தையன் என்பவருக்கு, முதல்வரின் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரோயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 2006 ம் ஆண்டிற்கு முன்னர் வருவாய்த்துறையின் மூலம் இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இளம் சிறார் இருதய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறை மூலம் பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு இருதய கோளாறு இருந்த மாணவ, மாணவிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உயிர் காக்கப்பட்டது.

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான தமிழக அரசின் இன்சூரன்ஸ் திட்டம் கடந்த 2009 ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் துவங்கப்பட்டது. இதில் உயர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தபட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டது. 2012-ம் ஆண்டு முதல்வரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டம் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு இன்று வரை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தில் ஆயிரத்து 450 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளும், 154 தொடர் சிகிச்சைகளும், 38 நோய் கண்டறியும் பரிசோதனைகளும், 8 உயர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றது.

இத்திட்டத்தில் தற்போது 267 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 792 தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் ஆயிரத்து 59 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி பிரதமரால் துவங்கி வைக்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டிற்கு ஒரு பயனாளியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் சமூக பொருளாதார சாதி வாரியான கணக்கெடுப்பு பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டை சார்ந்த 77 லட்சத்து 70 ஆயிரத்து 928 பயனாளிகளின் குடும்பங்களுக்கு ஓர் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 4 லட்சத்து 28 ஆயிரத்து 272 பயனாளிகளுக்கு இன்சூரன்ஸ் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் இன்று வரை முதல்வரின் விரிவான இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் இருதய நோய் அறுவை சிகிச்சை 97 நபர்களுக்கும், சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சை 2 ஆயிரத்து 423 நபர்களுக்கும், கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை 231 நபர்களுக்கும், புற்றுநோய் அறுவை சிகிச்சை 82 நபர்களுக்கும், கல்லீரல் நோய் சிகிச்சை 32 நபர்களுக்கும், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 401 நபர்களுக்கும், தண்டுவடம் சிகிச்சை 36 நபர்களுக்கும், காது மூக்கு தொண்டை சிகிச்சை 114 நபர்களுக்கும், கண்நோய் அறுவை சிகிச்சை 185 நபர்களுக்கும் உட்பட நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 7 ஆயிரத்து 742 பேருக்கு, ரூ.28 கோடியே 13 லட்சத்து 32 ஆயிரத்து132 மதிப்பீட்டில் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News