அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை குறித்து முதல்வருக்கு கோரிக்கை
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை குறித்து முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அரசு ஆசிரியர்களைப் போல் அனைத்து சலுகைகளையும் வழங்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர், நாமக்கல் ராமு, தமிழக முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும், மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டும், புதியதாக 32 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கட்டுப்பாட்டில் புதியதாக மாற்றம் செய்யப்பட்ட அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் விவரங்கள் சார்ந்த விபரங்கள் கொண்டுவரப்பட்டு வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் முழுமையாக அரசே சம்பளம் வழங்கி வருகிறது.
இதில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையான அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட பின்னரே அவர்களின் சம்பள பட்டியல் கருவூலத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அமைத்து, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் மட்டுமே அப்பள்ளி நிர்வாகம் செய்ய வேண்டும். தமிகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, நிர்வாகத்தின் தலையீடு இல்லாமல், நேரடியாக மாவட்ட கல்வி அலுவலகம் மூலமே மாத சம்பளம், பதவி உயர்வு, சம்பள உயர்வு, பொதுத் தேர்வு பணி ஒதுக்கீடு போன்ற அனைத்துமே அரசுப்பள்ளியில் பின்பற்றப்படும் நடைமுறை போலவே வழங்க வேண்டுதல்
பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் பணி மூப்பு உடைய ஆசிரியர்களுக்கு துறைஅலுவலர்கள், வினாத்தாள் வைப்பறை கட்டுப்பாட்டு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் போன்ற பணிகள் வழங்கப்படாமல் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போலவே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பணி மூப்பு அடிப்படையில் பாகுபாடின்றி உரிய பொது தேர்வு பணிகளை வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளியின் செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியர் இதில் குறுக்கிட முடியாதவாறு, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.