நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி : ஒரு முட்டை விலை ரூ. 4.60

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 நாட்களில் 50 பைசா உயர்ந்ததால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு முட்டை விலை ரூ. 4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-05-01 14:40 GMT

பைல் படம்


நாமக்கல்,

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினமும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விற்பனை விலையை என்இசிசி அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். கடந்த ஏப். 26ம் தேதி ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.05ல் இருந்து 5பைசா உயர்த்தி ரூ. 4.10 ஆக என்இசிசி அறிவித்தது. 27ம் தேதி மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.20 ஆனது. 28ம் தேதி மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு 4.30 ஆனது. 29ம் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.40 ஆனது. 30ம் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.50 ஆனது. இந்த நிலையில் இன்று மாலை என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.60 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை 5 நாட்களில் 50 பைசா உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 82 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 85 ஆக சிகா நிர்ணயித்துள்ளது.

Similar News