அரையாண்டு விடுமுறையில் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
அரையாண்டு விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பள்ளிக்கல்வித்துறையால் பள்ளிகளுக்கு, 2021-22ஆம் கல்வியாண்டில், 27.12.2021 முதல் 31.12.2021 வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிவுற்று ஜன.3ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும்.
இந்த, விடுமுறை நாட்களில் பள்ளிக்கு மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரக்கூடாது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என அனைத்து நகராட்சி, அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, மெட்ரிக், சிபிஎஸ்சி துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தால், சம்மந்தபட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.