நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாள் விழாவில் கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாள் விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் பங்கேற்றார்.

Update: 2022-10-19 07:42 GMT

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நாமக்கல்லில் நடைபெற்ற கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாள் விழாவில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளையின், 134வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில், வெங்கட்ராமன் பிள்ளை - அம்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 1888ம் ஆண்டு அக்.19ம் தேதி கவிஞர் ராமலிங்கம்பிள்ளை பிறந்தார். மோகனூர் அரசு பள்ளியில் படித்து, திருச்சியில் பி.ஏ. பட்டம் படித்த இவர், நாமக்கல் தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக பணிபுரிந்தார். பின்னர் திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும், கரூர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர் சிறந்த ஓவியக்கலைஞர். இவர் கையினால் வரைந்த மகாத்மா காந்தியின் ஓவியம் மிகவும் சிறப்புப் பெற்றது. சுததந்திரப் போராட்டக் காலத்தில், மோகனூரில் இருந்து வந்து, நாமக்கல் தட்டாரத்தெருவில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சுதந்திரப் போராட்டத்தின்போது இவர் எழுதிய கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, தமிழன் என்று சொல்லடா, தலை நிமிரந்து நில்லடா போன்ற பாடல்களை பாடினார். இந்த பாடல்கள் இந்தியா முழுவதும் புகழ் பெற்றது. தமிழகத்தில் முதல் அரசவைக்கவிஞராக பணியாற்றிய இவர், சாகித்ய அகாடமியின் தமிழக பிரதிநிதியாக செயல்பட்டார். தமிழக சட்ட மேல்சபையில் எம்.எல்.சி.யாகவும் பணியாற்றினர். சிறந்த நாவல் ஆசிரியரான இவரின் மலைக்கள்ளன் நாவல் எம்.ஜி.ஆர். நடிப்பில் சினிமாவாக தயாரிக்கப்பட்டது. பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்ற இவர் தனது 83வது வயதில் மறைந்தார்.

அவரது புகழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சென்னையில் அரசு கட்டிடத்திற்கு கவிஞர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை  மாளிகை என பெயர் சூட்டி தமழக அரசு கவுரவித்து உள்ளது. மேலும் நாமக்கல் தட்டாரத்தெருவின் பெயரை ஏற்கனவே தமிழக அரசு, கவிஞர் ராமலிங்கம்பிள்ளை தெரு என  பெயர் மாற்றியது. அவரது மறைவுக்குப்பின் அவர் வசித்த வீடு கவிஞரின் நினைவில்லமாக மாற்றப்பட்டு, தற்போது அங்கு பொது நூலகத்துறையின் சார்பில், லைப்ரரி செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில், நாமக்கல் கவிஞரின் 134வது பிறந்த நாள் விழா, இன்று காலை, நாமக்கல்லில் உள்ள அவரது நினைவில்லத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கவிஞரின் மகன் ராஜாராமலிங்கம் ஏற்பாட்டின் பேரில், கவிஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, சுமார் 600 ஏழைப் பெண்களுக்கு இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் துவக்கி வைத்தார். தொடர்ந்து சுமார் 6 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, நகராட்சி கவுன்சிலர் சரவணன், தாசில்தார் சக்தி, நாமக்கல் கவிஞர் பேரவை நிர்வாகிகள் நடராஜன், மோகன், செல்வம், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

Tags:    

Similar News