வங்கியை ஏமாற்றி கடன் பெற்று மோசடி: 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை

இந்தியன் வங்கிக் கிளையை ஏமாற்றி கடன் பெற்று மோசடி செய்த நாமக்கல்லைச் சேர்ந்த 2 தொழிலதிபர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-05-14 10:00 GMT

பைல் படம்.

இந்தியன் வங்கிக் கிளையை ஏமாற்றி கடன் பெற்று மோசடி செய்த, நாமக்கல்லைச் சேர்ந்த 2 தொழிலதிபர்களுக்கு, சிபிஐ கோர்ட்டில், தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. உடந்தையாக இருந்த வங்கி மேலாளருக்கு  2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் இயற்கை உரம் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சக்திவேல், விஜயகுமாரி ஆகியோர் கடந்த 2010ம் ஆண்டு, இந்தியன் வங்கி கிளையில் போலி சான்றிதழ்களைக் கொடுத்து கடன் விண்ணப்பம் அளித்துள்ளனர். வங்கி மேலாளர் பாலசுப்ரமணியன் சான்றிதழ்களை முறையாக சரிபார்க்காமல் விதிமுறைகளை மீறி அவர்களுக்கு கடன் வழங்கியுள்ளார். கடன் பெற்ற தொழிலதிபர்கள் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. இதன் மூலம் இந்தியன் வங்கிக்கு ரூ.2 கோடியே 61 லட்சத்து 63 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக இந்தியன் வங்கி நிர்வாகம், கோவை சிறப்பு சிபிஐ கோர்ட்டில் புகார் செய்தது. இதையொட்டி கடந்த 2010ம் ஆண்டு டிச.15ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கோவை சிபிஐ கோர்ட் சிறப்பு நீதிபதி முன்னிலையில் இவ்வழக்கு விசாணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

12 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு விசாரணை முடிவடைந்து, தற்போது நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில், போலியான சான்றுகளைக் கொடுத்து இந்தியன் வங்கியை மோசடி செய்து கடன் பெற்ற குற்றத்திற்காக தொழிலதிபர்கள் சக்திவேல், விஜயகுமாரி ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. சான்றிதழ்களை முறையாக சரிபார்க்காமல், விதிமுறைகளை மீறி கடன் வழங்கிய வங்கி மேனேஜர் பாலசுப்ரமணியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டணை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Tags:    

Similar News