கென்யா நாட்டில் இருந்து நாமக்கல் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி

கென்யா நாட்டில் இருந்து நாமக்கல் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Update: 2023-01-18 07:50 GMT

கொரோனா - கோப்புப்படம் 

கென்யா நாட்டில் இருந்து நாமக்கல் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் உள்ள காளப்பநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த 36 வயது வாலிபர், கென்யா நாட்டில் பணிபுரிந்து வந்தார். அவர் பொங்கல் பண்டிகை நேரத்தில் கென்யாவில் இருந்து நாமக்கல் திரும்பினார். அவர் கென்யாவிலிருந்து ஷார்ஜா வழியாக விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சளி மாதிரிகள் சென்னையில் உள்ள கொரோனா ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனையில்  அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அவருடைய குடும்பத்தில் உள்ள 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன் உத்தரவின் பேரில், காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் தீவிர கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன் இது குறித்து கூறியதாவது: காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவரது குடும்பத்தில் உள்ள 6 பேரின் சளி  மாதிரிகளும் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் உள்ளார். 

இவ்வாறு சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் கூறினார்.

Tags:    

Similar News