மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் 254 கோரிக்கை மனு அளிப்பு
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில், கலெக்டரிடம் பொதுமக்கள் 254 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 254 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். அவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
கூட்டத்தில் டிஆர்ஓ (பொ) மல்லிகா, சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.