குன்னூரில் மாதம் 1 கோடி தடுப்பூசி தயாரிக்க ஏற்பாடு: நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்

குன்னூரில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் 1 கோடி தடுப்பூசி தயாரிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக, தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறினார்.

Update: 2021-06-07 13:20 GMT

நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் மெகராஜ் ஆகியோர்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த மே. 23ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் தொற்றின் உச்சம் 1,032 பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலைதான் ஒட்டு மொத்த தமிழக அளவில் நடைபெறுகிறது. நேற்று மாநில அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,421 பேர். நலம் பெற்று வீடு திரும்பியவர்கள் 33,161 பேர். தொற்று பாதிப்பை காட்டிலும், நலம் பெற்று திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பது மனநிறைவை தருகிறது.

ஆக்ஸிஜன் கையிருப்பு கடந்த மாதம் 7ம் தேதி 230 மெட்ரிக் டன்னாக இருந்தது. தற்போது 700 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது. ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி மருத்துவமனைகளில் 37 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது. ஆக்ஸிஜன் இல்லாத படுக்கைகள் 37 ஆயிரத்து 475 காலியாக இருக்கும் சூழல் உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தொற்றின் வேகத்தில் இருந்து குறைந்து கொண்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து தொற்று தடுப்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளுடன் குழந்தைகளுக்கான பிரத்யேக கொரோனா சிகிச்சை மையம் இன்று முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை, கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 938 பேர். அவர்களுக்கு தேவையான மருந்து, மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. 1,790 பாட்டில் மருந்துகள் பெறப்பட்டுள்ளன. கறுப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க 35 ஆயிரம் பாட்டில் மருந்துகள் தேவை என, முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுவரை 3,840 பாட்டில் மருந்துகள் வந்துள்ளன.

குன்னூரில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான இந்திய பாஸ்டியர் நிறுவனம், 1907 ல் துவங்கப்பட்டு 303 நிரந்தர பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. வெறிநாய் கடிக்கான தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் அங்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது ரூ.137 கோடி மதிப்பில் அந்த மையம் மேம்படுத்தப்பட்டு, மாதம் 1 கோடி தடுப்பூசி குப்பிகளை நிரப்பும் திறனுடன் தயார் நிலையில் உள்ளது. இது குறித்து, தமிழக முதல்வரிடம் தகவல் தெரிவிக்கப்படும். அதேபோல் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டி மத்திய அரசை தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்துக்கு இம்மாதம் 42 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை என்ற நிலையில், இதுவரை, 5.50 லட்சம் மட்டுமே வந்துள்ளன. மேலும், 36.50 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து கிடைத்தவுடன், அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என்றார். 

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நாமக்கல் கலெக்டர் மெகராஜ், நாமக்கல் எம்.பி சின்ராஜ், முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, திருச்செங்கோடு ஈஸ்வரன், பரமத்திவேலூர் சேகர் உள்ளிட்டோர் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News