உயிர் காக்கும் சேவையில் தீயணைப்பு மீட்புத்துறையினர்

பொதுமக்களுக்கு ஆபத்து நேராத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2023-01-31 06:30 GMT

தீயணைப்பு வீரர்களின் மீட்பு பணிகள்

உயிர் காக்கும் சேவையில் தீயணைப்பு  மீட்டுப் படையினர் உன்னத பணியை ஆற்ரிவருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி, கைத்தறி மற்றும் தானியங்கி தறிகளில் ஜவுளி உற்பத்தி, விசைத்தறி மற்றும் தானியங்கி தறிகள் உற்பத்தி, சாயப்பட்டறை, லாரி பாடி கட்டுதல், கோழிப்பண்ணைகள், ஸ்பின்னிங் மில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது.

அதிக அளவிலான பொருட்செலவில் இந்த நிறுவனங்கள் அமைக்கப்படுகின்றன.இது போன்ற தொழில் நிறுவனங்களில் தீயினாலோ, மின் கசிவினாலோ தீ விபத்துக்கள் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் உள்ளவர்கள் பெரும்பாலோர் அவ்விடத்தில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறி விடுவார்கள்.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வரும் தீயணைப்பு படையினர் எதை பற்றியும் கவலைப்படாமல் தீப்பிடித்த இடத்தில் உள்ளே சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைக்கின்றனர். இவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளனர். தினசரி இவர்கள் வேலைக்கு செல்லும் போது, எந்த தீவிபத்தும் ஏற்படக்கூடாது என்று எண்ணித்தான் இவர்களின் குடும்பத்தினர் வழியனுப்பி வைக்கின்றனர்.

காலையில் செல்லும் இவர்கள் பணி முடிந்து திரும்பி பத்திரமாக வருவது என்பது எளிதல்ல. ராணுவத்தில் உள்ள நிலைதான் இவர்களின் நிலை. தீயை அணைக்கும் போது காயமடைந்து தவிக்கும் தீயணைப்பு வீரர்கள் அதிக அளவில் உள்ளனர். பாதுகாப்பு உடை அணிந்து இருந்தாலும் அதிக தீயை அணைக்கப் போராடும்  போது உடல் நீதியாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பிறர் உடைமைகளை பாதுகாக்க தன்னுயிரை தரும் மகத்தான பணியினை செய்து வருகின்றனர்.

கும்பகோணம் பள்ளியில் நடந்த தீ விபத்தில் எண்ணற்ற குழந்தைகளை காப்பாற்றினர். இருந்தும் குழந்தைகள் தப்பிக்க போதிய இட வசதி இல்லாததால் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர். இச்சம்பவத்தில் தீயணைப்பு படையினரின் சேவை அனைவராலும் பாராட்டப்பட்டது.

இது போல் ஆற்று வெள்ளத்தில் சிக்கியவர்கள், கிணற்றில் விழும் கால் நடைகள், போர் வெல்களில் விழுந்து உயிருக்கு போராடும் குழந்தைகள், கதவை உள்புறமாக தாழிட்டுகொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் குழந்தைகள், என பலதரபட்டவர்களை காப்பாற்றும் பணியில் சற்றும் பின்வாங்காமல் உயிர்களை காப்பாற்றி வாழ வைத்துக்கொண்டிருக்கும் வாழும் தெய்வங்களாக தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சேவையாற்றி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவில் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போதும், தீபாவளி திருநாளில் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருக்கு வேளையில்  இவர்கள் மட்டும் அன்றைய நாளில் தீயை அணைக்க விழிப்புணடன் காத்திருப்பார்கள்.  பொதுமக்களுக்கு ஆபத்து நேராத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களது சேவை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்

.

Tags:    

Similar News