உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையொட்டி நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-14 03:47 GMT

இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் காலை 8.30 மணியளவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

கொரோனா பரவல் காரணமாக முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் நாட்டு மக்கள் கொரோனா பிடியில் இருந்து மீண்டு வர பிராத்தனை செய்யப்பட்டது. ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தும் உன்னத பண்டிகையை நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் சமூக இடைவெளியுடன் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.  நாட்டுமக்கள் கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ள நாகூர் தர்கா கலிபா மஸ்தான் சாஹிப், பண்டிகை காலங்களில் வழிபாட்டு தளங்களை திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News