நாகை மருந்தகத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு மாத்திரைகள் பறிமுதல்

நாகையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்ததை சுகாதார துறை அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

Update: 2022-03-03 03:18 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கருக்கலைப்பு மாத்திரைகள்.

நாகையில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதற்கு மகப்பேறு மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்கி சாப்பிட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் சென்ற புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நாகை அடுத்த புத்தூரில் உள்ள கண்ணதாசன் என்பவருக்கு சொந்தமான தனிஷ்கா என்ற மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

அப்பகுதிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் வாடிக்கையாளர் போல சென்று கருக்கலைப்பு மாத்திரை கேட்கவே, 390 ரூபாய் மதிப்புள்ள கருக்கலைப்பு மாத்திரைகளை 2500 ரூபாய்க்கு எந்தவித மருந்து சீட்டும் இல்லாமல் கண்ணதாசன் விற்பனை செய்துள்ளார். அப்போது கையும் களவுமாக மருந்தக உரிமையாளர் கண்ணதாசனை பிடித்த சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள், கடையில் ஆய்வு மேற்கொண்டு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருந்தக உரிமையாளர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மருந்தகத்தில் மருந்து சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் கருக்கலைப்பு மாத்திரைகளை வாடிக்கையாளர் ஒருவர் வாங்குவது போல வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News