இடிந்து விழும் நிலையில் உள்ள நாகை கோர்ட்டை இடம் மாற்றம் செய்ய கோரிக்கை

இடிந்து விழும் நிலையில் உள்ள நாகை நீதிமன்றத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

Update: 2022-01-21 16:05 GMT

பழுதடைந்த நிலையில் உள்ள நாகை  நீதிமன்ற கட்டிடம்.

நாகை பப்ளிக்ஆபீஸ் சாலையில் நாகை மாவட்ட நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டும் இன்றி அருகில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களும் வழக்கு சம்பந்தமாக தினந்தோறும் வந்து செல்கின்றனர். இவ்வாறு தினந்தோறும் ஏராளமான பொதுமக்களை சந்திக்கும் நீதிமன்றம் 150 ஆண்டுகளை கடந்து விட்டதால் பழுதடைந்த நிலையில் உள்ளது. மழை காலங்களில் பல இடங்களில் மழைநீர் உட்புகுந்து நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை சேதமடைய செய்யும் நிலையும் உள்ளது. இந்நிலையில் இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்பொழுது வேண்டும் என்றாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால் நீதிமன்றத்தின் பிரதானநுழைவு வாயில் திடீரென மூடப்பட்டு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக நீதிமன்ற வளாகத்தில் மரத்தின் கீழ் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்பாக புகார்கள் அளிக்க தனித்தனியாக இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகளில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளித்துவிட்டு செல்ல வேண்டும். அந்த மனு விசாரணைக்கு வரும் போது சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள தற்காலிக வாயில் வழியாக வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருவதை தடுக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நாகை மாவட்ட வக்கீல்கள் சங்க செயலாளர் சசிகுமார் கூறும்போது நாகை நீதிமன்றம் புராதன சிறப்பு பெற்ற நீதிமன்றமாகும். கடந்த 150 ஆண்டுகாலத்தை கடந்த நீதிமன்றம். இந்த நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக நாகை மாவட்டம் மற்றும் இன்றி அருகில் உள்ள பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த நீதிமன்றம் மிகவும் பழுதடைந்து விட்டதால் அவ்வப்பொழுது பல்வேறு இடங்களில் மேற்கூரை பெயர்ந்து விழுகிறது. இதனால் நீதிமன்றத்தின் பிரதான வாயில் மூடப்பட்டு பின்புறம் வழியாக பொதுமக்கள் வர அனுமதி அளிக்கப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் உள்ளே புதிதாக நீதிமன்றம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை அது திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்படவில்லை. இதனால் இந்த புதிய நீதிமன்றம் இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக பயன்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் நலன் கருதி புதிய நீதிமன்றத்தை திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார்.

பொதுமக்கள் நலன் கருதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.23 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை திறக்க வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் நீதிமன்றங்கள் இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடப்பதற்குள் பழைய நீதிமன்றத்தில் இருந்து புதிதாக கட்டப்பட்ட நீதிமன்றத்தை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது புதிதாக கட்டப்பட்ட கோர்ட் இன்னும் கூடுதல் பணிகள் செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பணிகள் முற்றிலுமாக முடிந்த பின்னர் பொதுப்பணித்துறையில் இருந்து கட்டிடம் உயர்நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படும். அதன்பின்னர் புதிய நீதிமன்றம் செயல்படும். எனவே அந்த பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

படக்காட்சிகள் ; சிதிலமடைந்த நீதிமன்றம், தடை செய்யப்பட்ட அறிவிப்பு பலகை, மரத்தடியில் மனு வாங்குவது.

Tags:    

Similar News