சொத்து படுத்தும் பாடு: நாகையில் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்

நாகையில் சொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-03-08 13:57 GMT

மகன் மீது புகார் கொடுக்க மனு எழுதுகிறார் தந்தை.

நாகை மாவட்டம் திருப்பூண்டி அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சான்.77 வயதான இவர் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹரை சந்தித்து சொத்தை அபகரிக்க மகன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக புகார் அளித்தார்.

முதியவர் அளித்த புகார் மனுவில் தனக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்ட நிலையில், எனது மகள்கள், மகனுக்கு திருமணம் செய்து வைத்து, அனைவரும் தனித்தனி குடும்பமாக வசித்து வருகின்றனர். நான் சுயமாக எனது உழைப்பில் வாங்கிய மூன்றரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் எனது மகன் மதியழகன், அவரது பெயருக்கு நிலத்தை எழுதி வைக்க வற்புறுத்தினார்.

நான் மறுத்ததால் தந்தை என்றும் பாராமல் அடித்து துன்புறுத்தினார். நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பும் எனக்கு சாதகமாக வந்தது. இந்நிலையில் எனது வீட்டில் நான் வைத்திருந்த நிலப்பட்டாவை, எனக்கு தெரியாமல் திருடி சென்று. திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். இதற்கு சிலர் உடந்தையாக இருந்துள்ளனர்.

நான் நிலப்பட்டாவை தர வேண்டும் என கேட்டதால், எனது மகன் அடித்து துன்புறுத்தினார். உயிருக்கு பயந்து நான் தற்போது எனது மகள்கள் வீட்டில் தங்கியுள்ளேன். எனது மகனிடம் இருந்து எனக்கு உயிர் பாதுகாப்பு அளித்து, திருடிச் சென்ற நிலப்பட்டாவை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாகப்பட்டினம் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News