நாகூரில் வீடு இடிந்து உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
நாகை மாவட்டம் நாகூரில் வீடு இடிந்து உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம் நாகூரில் கடந்த 13,ஆம் தேதி கனமழை காரணமாக ரெஜினா பேகம் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்கு இடையே அவரது மகள்கள் இருவர் சிக்கிக் கொண்ட நிலையில் ரெஜினாபேகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வீடு இடிந்து விழுந்து விபத்தில், உயிரிழந்த ரெஜினாபேகம் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் அறிவித்தது. இதையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் காசோலையை நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ரெஜினா பேகத்தின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
தாயை இழந்த தங்களுக்கு நிவாரண நிதி உதவி வழங்கிய தமிழக அரசுக்கு, அக்குடும்பத்தினர் மற்றும் நாகூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.