காரைக்கால்: மும்பைக்கு ரயிலில் கடத்த முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல்
காரைக்காலில் இருந்து மும்பைக்கு ரயிலில் கடத்த முயன்ற மது பான பாட்டில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
காரைக்காலிருந்து நாகை வழியாக மும்பைக்கு ரயில் மூலமாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக நாகை மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் காரைக்கால் ரயில் நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மும்பை புறப்பட இருந்த ரயிலில் 9 பைகள் தனியாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 9 பைகளையும் சோதனை செய்தபோது 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 111 உயர் ரக வகை மாதுபாட்டில்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த நாகை மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மதுபாட்டில்களை கடத்தி செல்ல முயன்ற கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.