நாகை: மழையை எதிர்கொள்ள அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கனமழையை எதிர்கொள்வது குறித்து நாகை மாவட்டத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் மெய்யநாதன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-11-29 06:48 GMT

கனமழையை எதிர்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடந்தது.

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்டத்தின் மழை பாதிப்புகள் குறித்து காணொலி காட்சி மூலம் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. 

கூட்டத்தில் பேசிய அமைச்சர், அரசு அதிகாரிகள் மழை காலத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும், எந்நேரமும் மக்கள் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும் எனவும் கூறினார். இதனிடையே நாகைக்கு நாளை கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜிடம் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து தொலைபேசியில் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் ;25 நாட்களில் பெய்த கனமழை பாதிப்புகளை கணக்கிட்டு, வருகின்ற பருவமழையை எதிர்கொள்ள நாகை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

நாகை மாவட்டத்தில் ஒருநாளைக்கு 3750 நபர்களுக்கு 10 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 10 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், கனமழை ஓய்ந்த பிறகு முழுமையான நெற்பயிர் பாதிப்பு தெரிய வரும் என்றார். மேலும், 1076 வீடுகள் சேதமடைந்து உள்ளதாக கூறிய அமைச்சர்,  மழை பாதிப்புகளை எதிர்கொள்ள நாகை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன், செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, ஷாநவாஸ், பேரிடர் கண்காணிப்பு அலுவலர் பாஸ்கர், நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News