நாகையில் உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 465 ம் ஆண்டு சந்தனக்கூடு விழா

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, சாம்பிராணி ரதம் மட்டும் அனுமதிக்கப்பட்டது.

Update: 2022-01-14 16:55 GMT

சந்தன கூடு அலங்காரம்.

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 465-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த 4,ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு  நாகப்பட்டினத்திலிகுந்து துவங்கியது.

நாகப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்கள் சிறப்பு துஆ ஓதி சந்தனக்கூடு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, சாம்பிராணி ரதம் மட்டும் அனுமதிக்கப்பட்டது. நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் வழி நெடுகிலும் நின்றிருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சந்தனக்கூட்டின் மீது பூக்களை தூவி கண்டும் மகிழ்ந்தனர்.

சந்தனக்கூடு ஊர்வலமானது வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்கா சென்றடையும், இந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக சில மணிநேரத்தில் நாகூர் தர்காவில் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு நாகூர் ஆண்டவர் சமாதியில் நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிபு தலைமையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 45 சாகிப் மட்டும் பங்கேற்றனர். அவர்களுக்கு நாகூர் ஆண்டவருக்கு பூசப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சந்தனக்கூடு ஊர்வலத்தில் தாரை தப்பட்டை பேண்டு வாத்தியங்கள் உடன் மக்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக செல்வதற்கு போலீசார் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சந்தனக்கூடு நிகழ்ச்சியில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News