நாகை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற 117 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

நாகை மாவட்ட நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற 117 வார்டு உறுப்பினர்கள் இன்று அந்தந்த அலுவலகங்களில் பதவி ஏற்றனர்.

Update: 2022-03-02 10:02 GMT

நாகை மாவட்டத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றனர்.

நாகை மாவட்டத்தில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகை மற்றும் வேதாரண்யம் ஆகிய இரண்டு நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது. நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில், 16வது வார்டில்  போட்டியின்றி ஒருவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 35 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. 24 வார்டுகளிலும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் 3 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர்.

இதேபோல வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. 17 இடங்களையும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் 2 இடங்களையும், அ.தி.மு.க. 1 வார்டையும், சுயேட்சை 1 வார்டையும் கைப்பற்றியுள்ளது. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் ஆகிய இரண்டு நகராட்சிகளையும் அ.தி.மு.க. வென்றிருந்த நிலையில் தற்போது இரண்டு நகராட்சிகளையும் தி.மு.க. தன்வசப்படுத்தி உள்ளது.

பேரூராட்சிகளை பொறுத்தவரை கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 8 வார்டுகளை தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணி கட்சியான ம.தி.மு.க. 2 வார்டுகளையும், அ.தி.மு..க 2 வார்டுகளையும், சுயேட்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர்.

வேளாங்கண்ணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், தி.மு.க. 11 வார்டுகளையும், தி.மு.க. கூட்டணி கட்சியான ம.ம.க. 1 வார்டையும், அ.தி.மு.க. 2 இடங்களையும், சுயேட்சை 1 வார்டையும் கைப்பற்றியது.

தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க. 8 வார்டு களையும், தி.மு.க. 6 வார்டுகளையும், தி.மு..க கூட்டணி கட்சியான வி.சி.க. 1 வார்டையும் கைப்பற்றினர்.

திட்டச்சேரி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 8-வார்டு களையும், தி.மு.க. 4 வார்டுகளையும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் 2 வார்டுகளையும், அ.தி.மு.க. 1 வார்டையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 117 நகர் மற்றும் பேரூர் மன்ற   உறுப்பினர்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர். நாகை நகராட்சியில் வரிசையாக பொறுப்பேற்றுக்கொண்ட 36 வார்டு உறுப்பினர்களுக்கும் நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதேவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Tags:    

Similar News