திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி தீபம் ஏற்ற முயன்ற இந்து முன்னணியினர் கைது

திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி தீபம் ஏற்ற முயன்ற இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-05 07:06 GMT

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் 140 பெண்கள் உள்பட 800 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். தடையை மீறி, ஊர்வலம் சென்ற 300 இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள, மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணியினர் பல்வேறு வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக, உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கோவில் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டும் காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.

மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபத்தை அறநிலையத்துறை சார்பில் ஏற்றப்படுகிறது. இதற்கு, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று ஆர்ப்பாட்டம் முற்றுகை போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் எனக்கூறியும் திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் ஆர்பாட்டம் செய்தனர்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி, மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில் குமார். துணை ஆணையர் சீனிவாச பெருமாள் ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவிலைச்சுற்றி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய பின்பு தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து, காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

கடந்த 20 வருடங்களாக கார்த்திகை தீபம் ஏற்ற போராடுகிறோம்.உயர் நீதி மன்ற உத்தரவினை, அறநிலையத்துறையோ, காவல்துறை செயல் படுத்தாமல் கார்த்திகை தீபம் ஏற்ற தடை செய்கிறது.

உயர்நீதிமன்ற உத்திரவினை செயல்படுத்த கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். அ.தி.மு.க.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே இந்து விரோத ஆட்சியை தான் நடத்துகிறார்கள். மதசார்பின்மை என கூறி இந்து கோயில்களை இடிக்கிறார்கள். ஆட்சிமாற்றத்துடன் வரும் 2026ல் தடையை மீறி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவோம். 

இவ்வாறு காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

Tags:    

Similar News