அதிமுகவில் ஒபிஎஸ் -ஐ இணைக்க அதிமுக எம்எல்ஏ எதிர்ப்பு
திமுகவை வலிமையுடன் எதிர்க்கக்கூடிய சக்தி எடப்பாடி தலைமையிலான அணியிடம் மட்டுமே உள்ளது;
தகுதி இல்லாத ஆட்களை சேர்த்துக்கொண்டால் உடலில் புற்றுநோய் வருவதை போல அதிமுக கட்சிக்குள் ஓபிஎஸ்-ஐ சேர்க்க முடியாது என ராஜன்செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில், உள்ள தனியார் மண்டபத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பக்கம் நிற்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறச்செய்வதற்கான கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. திமுகவை வலிமையுடன் எதிர்க்கக்கூடிய சக்தி எடப்பாடி தலைமையிலான அணியிடம் மட்டுமே உள்ளது.
இன்றைக்கு சிலர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தங்களுக்கு ஏற்றவாறு வளைத்திருக்கிறார்கள். நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான். உச்சநீதிமன்றத்தில் நிரந்தரத் தீர்ப்பு இன்னும் வழங்கவில்லை. இடைத்தேர்தலுக்காக மட்டுமே இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
சிலர் , கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான். மிகப்பெரிய இழப்பை சந்தித்து விட்டார்கள். தேர்தல் ஆணையம் இன்னும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி இல்லை என அறிவிக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மிகச் சிறப்பாக செயலாற்றக் கூடியவர் வெற்றியை தவறாக கொண்டாடுவதில்லை.
திமுகவை வீழ்த்த எங்களுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு இது. அதிமுக பொதுச்செயலர் பதவி என்பது பொதுகுழுவினால் தொண்டர்களால் தேர்தெடுக்கப்பட்ட உச்சப்பட்ச பதவி. இரட்டை இலை சின்னத்தை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம், ஆனால் நாங்கள் ஆதரிப்பது எடப்பாடி பழனிச்சாமியைத்தான்.
அதிமுகவின் முழுமையான எதிரி திமுக. திமுகவிற்கு அதிமுக எதிரி. திமுக வேறு, அதிமுக வேறு. அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவுக்கு தகுதி இல்லை. அமைச்சர் மனோதங்கராஜ் சிலம்பம் ஆடலாமே தவிர, அதிமுகவிற்குள் சிலம்பம் ஆடத்தேவையில்லை. எங்களுடைய சிறப்புக்குரிய தலைமை எடப்பாடி பழனிச்சாமிதான்.
எடப்பாடி எனும் மிகப்பெரிய ராஜதந்திரி எங்களிடம் உள்ளார், எங்களிடம்தான் சரியான தலைமை உள்ளது. பலர் பல கணக்கு போடுவார்கள். சிலர் கூட்டு சேர்ந்தால் வாக்குகள் கூடும். சிலர் கூட்டு சேர்ந்தால் மைனஸ் ஆகும். நாங்கள் மைனஸ் ஆக விரும்பவில்லை. சரியில்லாத தலைமையை கூட்டு சேர்த்துக் கொண்டால் உடலில் புற்றுநோய் வருவது போல அதை கட்சிக்குள் அனுமதிக்கக் கூடாது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் எங்களுக்கு வெற்றிக்கு முதல் படி இது. திமுக அதிகார பலத்தை பண பலத்தை காட்டுவார்கள். அதை எதிர்கொள்ள அதிமுகவிற்கு முழு தைரியம் உள்ளது. போலி வாக்காளர் வைத்திருப்பதை, எடப்பாடி ஏற்கெனவே கூறி உள்ளார். திமுக வன்முறையை காட்டும் பொழுது வன்முறையை செய்வதை அதிமுக தேர்தல் ஆணையத்திடம் சரியான நேரத்தில் காட்டுவோம்.
மத்திய தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தியதால் இன்றைக்கு சரியான தீர்ப்பு வழங்கப்படவில்லை. இடைத்தேர்தலில் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். சின்னத்தை முடக்குவது தொடர்பாக யாரும் வழக்கு போடவில்லை, எங்களது அதிகாரம் பொதுக்குழுவில் ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் இபிஎஸ் என்பதற்காகத்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளோம்.
அதிமுகவினர் நினைவு சின்னம் அல்லது சிலை வைப்பதை தடுக்கவில்லை, முன்னாள் முதல்வர் கருணாநிதி மிகப்பெரிய எழுத்தாளர் தான். ஆனால் அவரைப் போன்று எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். சிலை வைப்பது நினைவுச்சின்னம் அமைப்பது என்பது அண்ணா காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்றைக்குள்ள பொருளாதார பற்றாக்குறையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். பேனா வைப்பதற்கு ஓபிஎஸ் கூட சம்மதம் தெரிவித்திருக்கிறார். எதன் அடிப்படையில் அவர் அதை கூறினாார் சுயலாபத்திற்காகவா ?
சசிகலா எதற்காக பேச்சுவார்த்தைக்கு வரப் போகிறார். அவர் வாக்காளராக எடப்பாடிக்கு கூட வாக்களிக்க வரலாம். அவர் கட்சியில் கிடையாது. அவர் சாதாரண மக்களாக வாக்காளராக அதிமுகவில் இணைந்து பயணிக்கலாம். எங்களை பொறுத்தவரை சசிகலாவுக்கும் அதிமுக கட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றார்.