வரலட்சுமி நோன்பையொட்டி பெண்கள் கயிறு கட்டி விரதம்
கிருஷ்ணகிரி பகுதியில் வரலட்சுமி நோன்பையொட்டி பெண்கள் கயிறு கட்டி விரதத்தை தொடங்கினர்.
ஆவணி மாத பவுர்ணமி நாளுக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது. இன்று வரலட்சுமி நோன்பையொட்டி பெண்கள் வீடுகளை அலங்கரித்து நோன்பு கயிறு கட்டி விரதத்தை தொடங்கினர். பூஜை அறையில் கோலமிட்டு, தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை தயார் செய்து அம்மனை வரவேற்றனர். வரலட்சுமியை வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும் என்பது நம்பிக்கை. எட்டு விதச் செல்வங்களைத் தருவதுடன், தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள் என்பது ஐதீகம். இதனால்தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்கின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்களுக்கு சென்று வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பெண்கள் வரலட்சுமி பூஜையை தங்கள் வீடுகளிலேயே செய்தனர். நெய் விளக்கேற்றி, மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானித்தனர். லட்சுமி படம் வைத்து, தூபம் காடடி, தீபாராதனை செய்தனர். மேலும், வீட்டிற்கு வந்த பெண்களுக்கு வளையல்களை கொடுத்தும், சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகளை படைத்து அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.