கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி: மஞ்சு விரட்டு நலச்சங்கம் கோரிக்கை

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என்று, கிருஷ்ணகிரி மாவட்ட தமிழர் பாரம்பரிய மஞ்சு விரட்டு நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-09-14 12:00 GMT

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும் என , தமிழர் பாரம்பரிய மஞ்சு விரட்டு நலச்சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழர் பாராம்பரிய மஞ்சு விரட்டு நலச்சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் செல்வம், செயலாளர் ரமேஷ், பொருளாளர் அண்ணாமலை தலைமையில் , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஓர் ஆண்டாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் கால்நடைகளுக்கு நோய் தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மேலும், தமிழர் பாரம்பரிய மஞ்சு விரட்டு, எருதாட்டம், எருது விடும் விழாக்கள் நடைபெற குறுகிய காலமே உள்ளதால், போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தடுப்பூசி செலுத்தி, காளைகளை பாதுகாக்க வேண்டும்.

தற்போது மாவட்டத்தில் அந்தந்த கிராமங்களில் கன்றுகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே, அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News